பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

ஞாயிறு, மார்ச் 10, 2019

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

சனி, மார்ச் 09, 2019

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

வியாழன், மார்ச் 07, 2019

உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்

நாம் ஏன் மார்க்சியத்தையோ வேறு ஏதோ ஒரு தத்துவத்தையோ நாடுகிறோம்? நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம். பார்க்கும் போது இது ஏன் இப்படி உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு விபத்து நடக்கிறது, ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது, ஒரு படுகொலை அரங்கேற்றப்படுகிறது. இதிலெல்லாம் யாருடைய பங்களிப்பு என்ன? யாருக்கு ஆதாயம், யாருக்கு இழப்பு? இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று பல கேள்விகள் வருகின்றன. அவற்றுக்கு விடை கிடைப்பதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இவ்வாறு நான் எதிர்கொண்ட பல கேள்விகளுக்கு மார்க்சின் மூலதனம் நூலை படிப்பதன் மூலம் விடைகள் கிடைத்தன. மேலும், மூலதனம் நூலை 21-ம் நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கு பொருத்தும் ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையான ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை வந்தடைய உதவியது

நான் மூலதனம் நூலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூலதனம் வாசிப்பு வட்டம் சைதாப்பேட்டையில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் பிரதிநிதிகள் சங்கக் கட்டிடத்தில் நடத்தும் வகுப்பில் வாசிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு 3-4 ஆண்டுகளாக தொடர்ந்து 3 பாகங்களும் வாசித்து முடிக்கப்பட்டன. நடுவில் பல வகுப்புகளை நான் தவற விட்டிருந்தேன். இதற்கிடையில் ஜான் ஸ்மித்தின் ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் என்ற ஆய்வறிக்கையின் பிரதியும் கிடைத்து அதை படித்திருந்தேன்.

மார்க்சின் மூலதனமும், ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு எப்படி விடை அளித்தன என்பதை பேச வேண்டுமானால் எனது பணி வாழ்க்கை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும்.

நான் படித்தது பி.டெக் (லெதர் டெக்னாலஜி). வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளை தெரிந்தவர்களுக்கு தோல்துறை பற்றி தெரிந்திருக்கும். ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோலை அழுகாமல் பதப்படுத்தி கெமிக்கல் போட்டு ஷூ, கைப்பை, தோல் மேலாடை போன்றவை செய்ய பொருத்தமான லெதராக மாற்றுவதை டேனிங் என்று அழைக்கிறோம். அந்தத் தொழில்நுட்பத்தை சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பாக படித்தேன்.

தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் டேனரிகள் மிக அதிக அளவில் உள்ளன. ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளிலும், சென்னையிலும் பல சிறிய மற்றும் நடுத்தர தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், நான் படித்து முடித்ததும் வேலை செய்யப் போனது மத்திய பிரதேசம் தேவாஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள டாடா குழுமத்தின் தோல் உற்பத்தி தொழிற்சாலைக்கு. இந்தியாவிலேயே அதுதான் மிகப்பெரிய தோல் பதனிடும் ஆலை. அந்த ஆலையில் 4 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அந்த ஆலையில் ஒரே கூரையின் கீழ் 1000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இங்கு semi-finished தோலை finished தோலாக உற்பத்தி செய்தனர்.

இங்கு 4 ஆண்டுகள் வேலை செய்த பிறகு டாடாவின் சீன அலுவலகத்தில் ஷாங்காய் நகரத்துக்குச் சென்றேன். டாடாவில் உற்பத்தியாகும் தோல்கள் அதன் ஹாங்காங் அலுவலகம் மூலம் சீன தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

டாடா ஷாங்காயில் 2 ஆண்டுகள் வேலை செய்த பிறகு தொழில்நுட்ப கன்சல்டன்ட் சேவை வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஷாங்காய் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அதன் பிறகு சென்னைக்கு வந்து தோல் தொழிற்சாலைகளுக்கான ERP மென்பொருள் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தினேன்.

ERP என்றால் என்ன? ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பல பொருட்களை வாங்குவார்கள். அவை உள்ளீட்டு பொருட்கள். என்ன வாங்கினோம், யாரிடம் வாங்கினோம், நம் கையில் என்ன சரக்கு இருக்கிறது. என்ன உற்பத்தி நடக்கிறது, என்ன உற்பத்தி நிகழ்முறை, இறுதியாக என்ன பொருள் உற்பத்தி செய்து வெளியில் விற்றோம், யாரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, உற்பத்திச் செலவு என்ன போன்றவற்றை நிர்வகிக்கும் மென்பொருள் செய்ய வேண்டும்.

இந்த மென்பொருள் உற்பத்தி உலகமயமாதல் என்ற நிகழ்முறையில் மிக முக்கியமான விஷயம். எனவே, இதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.

டாடா ஆலை மிகப்பெரியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நான் அங்கு வேலை செய்யப் போகும் போது அவர்கள் ஒரு ERP மென்பொருளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு முன்னர் விற்பனை பிரிவில் இருக்கும் ஒருவர் கச்சா பொருள் கையிருப்பு என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் பிரிவுக்குப் போய் கேட்க வேண்டும். அந்தப் பிரிவு நிர்வாகி ஒரு அறிக்கை வைத்திருப்பார், அல்லது லெட்ஜரை புரட்டிப் பார்த்து தகவல் சொல்வார்.

இந்த ERP மென்பொருளில் எல்லோரும் ஒரே கணினி கட்டமைவில் வேலை செய்வார்கள். கச்சாப் பொருள் பிரிவில் அவர்கள் தமது தகவல்களை உள்ளிடுவார்கள். விற்பனை பிரிவில் விற்பனை தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்வார்கள். ஒரு பட்டனை தட்டினால் என்ன சரக்கு இருக்கிறது, என்ன வாடிக்கையாளருக்கு என்ன ஆர்டர் என்று பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு நான் வேலை செய்யப் போன்ற சீனாவிலும் சரி இந்தியாவிலும் சரி டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் குறைவு. சிறு, நடுத்தர நிறுவனங்கள்தான் அதிகமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்யலாம் என்று திட்டமிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதில் கூடுதலாக ஒரு புதிய சிந்தனையை சேர்க்க திட்டமிட்டேன்.

ராணிப்பேட்டையில் உற்பத்தியாகும் தோல் சீனாவில் காலணியாக மாற்றப்பட்டு ஹாங்காங் வழியாக அமெரிக்கா போய் சேருகிறது. அமெரிக்காவில் காலணி வாங்கும் ஒருவர் ஒரு பட்டனை தட்டினால் தோல் எங்கு செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் என்பது கனவுத் திட்டம். எனவே, ஏன் இந்த உற்பத்தி சங்கிலியில் இருப்பவர்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தேன். ஒரே நிறுவனத்துக்கு ஒற்றை மென்பொருள் இருப்பதைப் போல எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மென்பொருளை பயன்படுத்தக் கொடுத்தால் ஒட்டு மொத்த உற்பத்தி சங்கிலியையும் இணைத்து விடலாம் என்று திட்டம். அதாவது, இன்று பிரபலமாகியிருக்கும் கிளவுட் முறையில் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான மென்பொருள் செய்ய திட்டமிட்டோம்.

உதாரணமாக, காலணி தொழிற்சாலையில் இருந்து டேனரிக்கு தொலைபேசி தான் கேட்டிருந்த தோல் தயாராகி விட்டதா என்று கேட்டால் கூட சரியான பதில் கிடைக்காது. இவர்கள் சொல்வதைத்தான் அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை ஏன் இருக்க வேண்டும்? அவரே கணினியில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்த முடியாதா?

ஆனால், இன்றைய தனியார் அடிப்படையிலான உற்பத்தி முறையில் இது வேலை செய்யவில்லை. உற்பத்தி நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லா தகவல்களையும் கஸ்டமருக்கு வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. எல்லோரும் தத்தமது தரவுகளை தமது கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இப்படி பல தடைகளைத் தாண்டியும், தாண்ட முடியாமலும் வணிக ரீதியாக அந்த நிறுவனம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அரசியல், பொருளாதாரம், ஆய்வு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை ஒரு பின்னணியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 1

(2வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

திங்கள், பிப்ரவரி 04, 2019

சுவாமிநாதன் அய்யரின் மோடித்துவ திருப்பணி!

ப்போது குஜராத்தி/மார்வாடி/மும்பை இந்திய முதலாளிகளுக்கு வயிற்றை கலக்கும் விஷயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஜெயிக்காமல் போய் விடுவாரோ என்ற பயம்தான். அவர்களுக்கு தீனி போடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் அவர்களது பயத்தை தணித்து மனப்புண்ணுக்கு மருந்து போட வேண்டியிருக்கிறது. அதே நேரம் அவர்களது ஆதரவை மோடிக்கு தக்க வைக்கும் வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த வேலையை திறமையாகச் செய்து முதலாளிகளின் மனதை தடவிக் கொடுக்கும் நபர்தான் இந்த சுவாமிநாதன் அய்யர் என்பவர்.

வேலையின்மை வீதம் மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருப்பது பற்றி இவர் ஞாயிற்றுக் கிழமை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (“Job data’s is bad, but do not assume Modi will lose). ஸ்வாமினாமிக்ஸ் (ஸ்வாமியியல்) என்று அவரது 'திருநாமம்' சூட்டப்பட்ட அறிவியல் பெயரின் கீழ் இந்தப் பத்தியை தொடர்ந்து எழுதி வருகிறார், இந்த அறிவாளி. அவர் தன்னை தாராளவாத முதலாளித்துவ ஆதரவாளர் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்.

வேலையின்மை வீதம் 2011-12ல் 2.2% ஆக இருந்தது 2017-18-ல் 6.1% ஆக உயர்ந்திருக்கிறது இது 45 ஆண்டுகளாக இல்லாத ஒரு நிலைமை.

இந்த விஷயம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது, அல்லது பதுக்கி வைத்திருக்கிறது. அதன் மூலம் தனது மோசமான திருவிளையாடல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து போட்டிருப்பதை மூடி மறைக்க முயன்றது. இந்த அறிக்கையை டிசம்பர் 2018-லேயே வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிடாததை கண்டித்து தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பி.சி மோகனன், ஜே.வி மீனாக்சி ஆகியோர் ஜனவரி 29-ம் தேதி பதவி விலகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து  இந்த அறிக்கையின் விபரங்களை பிசினஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழ் வெளியிட்டு விட்டது. அதில் அம்பலமான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய  மோடி அரசின் புளுகுகளை அம்பலப்படுத்தி காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகளும், ஒரு சில பத்திரிகைகளும் எழுதி வருகின்றனர்.

இந்த அறிக்கையில் தெரிய வரும் இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உழைப்புச் சந்தையில் பங்கேற்பவர்களின் சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பது. உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது 16 முதல் 64 வயது வரை உள்ளவர்களில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. இது 2004-05-ல் 43% ஆக இருந்தது 2011-12ல் 39.5% ஆகக் குறைந்து, 2017-18ல் 36.9% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதாவது, வேலை செய்யத் திறமை உடைய மக்கள் பிரிவினரில் மேலும் மேலும் அதிகமான பிரிவினர் வேலை தேடுவதைக் கூட நிறுத்தியிருக்கின்றனர். 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், குடும்ப வேலை செய்பவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் இவர்கள் இயல்பாகவே வேலை தேடப் போவதில்லை, வேலையிலும் சேர்ந்திருக்கவில்லை. இவர்களைத் தவிர வேலையில் ஈடுபடுபவர்களும், வேலை தேடுபவர்களும் சேர்த்துதான் இந்த உழைப்புச் சந்தை பங்கேற்பு வீதம் கணக்கிடப்படுகிறது. இது ஆரோக்கியமான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் 60%-க்கு மேல் இருக்கிறது (உதாரணமாக சீனாவில் 68% ஆகவும் வங்கதேசத்தில் 56% ஆகவும், ஜப்பானில் 60% ஆகவும் உள்ளது).

நமது நாட்டில் ஏற்கனவே நலிந்து இருந்த இந்த வீதம் கடந்த 5 ஆண்டுகளில் கவலைக்கிடமான மட்டத்துக்கு போய் விட்டிருக்கிறது.

சரி, இவ்வளவு பேர் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டார்கள். வேலை தேடும் நடைமுறையில் இருப்பவர்களிடையே என்ன நிலைமை என்பதைத்தான் வேலையில்லாதவர்களின் சதவீதம் (6.1%) காட்டுகிறது.

இளைஞர்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். 15-29 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை வீதம் ஆண்களுக்கு 2011-12ல் 8.1% ஆக இருந்தது 2017-18ல் 18.7% ஆக உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு 2011-12ல் 13.1% ஆக இருந்தது 2017-18ல் 27.2% ஆக உயர்ந்திருக்கிறது.

அதாவது இந்த வயதில் வேலைக்கு போக தயாராக இருக்கும் பெண்களில் 4-ல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை, ஆண்களில் 6-ல் ஒருவருக்கு இந்த நிலைமை. இவர்கள் போக இந்த வயதில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் வேலை செய்யவே முன் வர முடியாத அளவுக்கு பொருளாதார, சமூக காரணங்களால் முடங்கியிருக்கிறார்கள்.

மேலே சொன்ன தரவுகளை உறுதி செய்யும் இன்னொரு விபரம் Centre for Monitoring Indian Economy – CMIE எனப்து ஒரு தனியார் நிறுவனம். அந்நிறுவனம் டிசம்பர் 2018-ல் வேலையின்மை வீதம் 7.4% ஆக இருந்ததாக மதிப்பிட்டிருக்கிறது. அதன் மதிப்பீட்டின்படி 2018 முழுவதும் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றிருக்கின்றன, 1.1 கோடி வேலை வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன.

இதை எல்லாம் பற்றி தாராளவாத முதலாளித்துவாதியான ஸ்வாமினாமிக்ஸ் எழுதும் அய்யருக்கு பதறவில்லை. இவ்வளவு உழைப்பு சக்தி வீணாகி பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே, முதலாளிகள் லாபம் ஈட்டுவது தடைப்படுகிறதே என்று கூட அவருக்கு கவலை இல்லை. இளைஞர்களின் ஆற்றல்கள் வீணடிக்கப்படுகின்றனவே என்றெல்லாம் அவர் யோசிக்கவே போவதில்லைதான்.

இந்த நிலைமையிலிருந்து மோடி அரசை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவருக்குக் கவலை.  அரசு நிறுவனம் மட்டும் மேலே சொன்ன புள்ளிவிபரத்தை சொல்லியிருந்தால் இது அரசு நிறுவனத்தின் திறன் குறைவு என்று சொல்லி விடலாம். தனியார் நிறுவனமான CMIE தரவுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, புள்ளிவிபரத்தை டபாய்க்க முடியாது.

எனவே, ஒரு பொருளாதாரவியல் 'நிபுணர்' ஆக இந்தக் கவலை அளிக்கும் நிலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத இந்த ஜால்ரா பேர்வழி சைடு வாங்கி ஜி.டி.பி வளர்ச்சிக்கு போய் விட்டார். 'மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7% ஆக உள்ளதே, மேலே சொன்னது உண்மையாக இருந்திருந்தால் அது ஆழமான பொருளாதார பெருமந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே' என்று கேட்கிறார்.

அதாவது 'உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது, முதலாளிகள் முதலீடு செய்வதும் குறைந்திருக்கிறது. இந்நிலையில் 7% வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படி அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தால் ஏற்றுமதி அதிகரித்திருக்க வேண்டும். அதுவும் குறைந்திருக்கிறது.' இத்தோடு இவரது பொருளாதார அறிவு முடிந்து விடுகிறது.

ஜி.டி.பி கணக்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கூட இப்போது விட்டு விடுவோம். அய்யர் யோசிக்கும் திசையிலேயே போய் நாமும் பரிசீலிக்கலாம்.

புதிய முதலீடுகள் இல்லை, உழைப்பாளர் பங்கேற்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வேண்டுமானால் உற்பத்தித் திறன் அதிகரிப்புதான் வழியா?

இன்னும் ஒரு முக்கியமான வழி, தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தொழிலாளி ஒரு நாளில் உழைக்கும் நேரம் அதிகமானாலும், அவரது உழைப்பின் தீவிரம் அதிகமானாலும் உற்பத்தியின் மதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும்.
  • டீ பிரேக், உணவு இடைவேளையை குறைத்தல் முதலியன
  • ஓவர் டைம் செய்தல்
    அல்லது 2வது 3வது வேலையில் ஈடுபடுதல் போன்றவை மூலம் ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தை ஒரு தொழிலாளி/உழைப்பாளி அதிகரித்துக் கொள்கிறார். 
  • சம்பளம் போதவில்லை என்றால் ஓவர் டைம், அதுவும் போதவில்லை என்றால் காலையில் பேப்பர் போடப் போவது, அதுவும் போதவில்லை என்றால் இரவில் செக்யூரிட்டி வேலைக்கு போவது என்று 3 வேலைகள் வரை செய்பவர்கள் இருக்கிறார்கள்.
  • இதோ போக தொழிற்சாலையில் வேலை தீவிரத்தை அதிகப்படுத்தியும் மதிப்பை அதிகரிக்கலாம்.
இந்த வகையில் ,
  • 2011-12ல் 40 கோடி தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 40 மணி நேரம் வேலை செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டில்  83,200 கோடி மணி நேரம் (40 கோடி உழைப்பாளர்கள் x வாரத்துக்கு 40 மணி நேரம் உழைப்பு x ஆண்டுக்கு 52 வாரம்) உழைப்புக்கான மதிப்பு படைக்கப்பட்டிருக்கும்.
  • 2017-18-ல் பங்கேற்பு குறைவு, வேலையின்மை வீதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 5 கோடி தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடாமல் இந்த எண்ணிக்கை 35 கோடியாக குறைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம் (மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் காட்டுவது இத்தகைய போக்கைத்தான்)

    இவர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 60 மணி நேரம் உழைப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

    இப்போது 2017-18ல் மொத்த உழைப்பு 1,09,200 கோடி மணி நேரம். எனவே, குறைவான தொழிலாளர்கள் அதே முதலீடு என்ற நிலையில் உற்பத்தி மதிப்பு 36,000 கோடி மணி நேரம் அதிகரித்திருக்கிறது. அதாவது 6 ஆண்டுகளில் 31.25% அதிகரிப்பு.
(இந்திய உழைப்பாளர்களில் கூலிக்கு வேலை செய்பவர்களும் உண்டு; சொந்தமாக சிறிய கடை, சிறிதளவு நிலம், ஆட்டோ, செய்தொழில் வைத்துக் கொண்டு இயங்குபவர்களும் உண்டு. இரண்டாவது பிரிவினர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு வாழ்க்கை பயணத்தை ஓட்ட பணமீட்ட ஓடுகின்றனர்.)

இது மிக அடிப்படையான கணக்கீடு. இன்னும் சிக்கலான விஷயங்களை இதற்குள் கொண்டு வரலாம். ஆனால், இதைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு 'நிபுணர்'தான் தன் பெயரில் ஒரு அறிவியலையே உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்த முதலாளிகளின் கால்நக்கி.

புள்ளிவிபரங்களை அந்த அளவுக்கு பேசி விட்டு இதனால் எல்லாம் மோடியும் பா.ஜ.கவும் தோற்றுவிடப் போவதில்லை என்று முதலாளிகளுக்கு ஆதரவு சொல்ல ஆரம்பிக்கிறார். '

வேலை வாய்ப்பு நிலைமை இவ்வளவு மோசமாக இருந்த போதும் திரும்பத் திரும்ப மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஜெயித்தது. எனவே பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லையாம், அல்லது இதை ஒரு பிரச்சனையாக பொருட்படுத்தவில்லையாம்.

அதற்கு ஆதரமாக டிசம்பர் 2018 வரையில் 21 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்து வந்ததாம். அதில் கோவா, மணிப்பூர், பீகார் போன்ற மாநிலங்களில் புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது இவருக்கு மறந்து போயிருக்கிறது. ஒட்டு மொத்தமாக கட்சிகளை விலைக்கு வாங்கி வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது நினைவுக்கு வரவில்லை. அரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் கூட்டணி கட்சிகளையே விழுங்கி ஆட்சியில் அமர்ந்ததும் இவருக்கு தெரியவில்லை. இதெல்லாம் மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்காமலே கொல்லைப் புற வழியாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததற்கான உதாரணங்கள். ஆனால் 21 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாலேயே மக்கள் வேலை இழப்புகளை தாங்கிக் கொண்டு மோடியை ஆதரித்திருக்கிறார்கள் என்று கதை விடுகிறார்.

மேலும் உ.பி நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள், டெல்லி சட்டமன்ற தேர்தல், கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் இவற்றை எல்லாம் பற்றி பேசாமல் விட்டு விடுகிறார்.  சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தோற்றாலும் அங்கும் வாக்கு சதவீதம் குறையவில்லையாம். மேலும், அந்த மாநிலங்களில் வரப் போகும் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்று பா.ஜ.க நம்புகிறதாம். எனவே, அந்தத் தேர்தல்களிலும் வேலை வாய்ப்பு இழப்பினால் மக்கள் பாதிக்கப்படவில்லையாம். இவரைப் பொறுத்தவரை பா.ஜ.கவினரின் நம்பிக்கைதான் அறிவியலின் ஆதாரம்.

எனவே, வேலை வாய்ப்பு நிலைமைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இல்லையாம்.

ஆகவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்  "முதலாளித்துவ பண முதலைகளே கவலைப் படாதீர்கள். நீங்கள் வழக்கம் போல உங்கள் சூறையாடலை, ஆடம்பர வாழ்க்கையை தொடருங்கள். மோடியும் பா.ஜ.கவும் மதவெறி, இனவெறி, சாதி வெறி, அரசியல் பேரம், அதிகார அமைப்புகளை ஏவி விடுவது, தேர்தல் முறைகேடுகள் என்று ஏதாவது செய்து தேர்தலில் ஜெயித்து தொழிலாளி வர்க்கத்தின் கோபத்திலிருந்து உங்களை காப்பாற்றும் வேலையை செய்து விடுவார்கள்" என்று முதலாளிகளுக்கு என்று தடவிக் கொடுக்கிறார், சுவாமிநாதன் அய்யர்.

சனி, பிப்ரவரி 02, 2019

இடைக்கால பட்ஜெட் : - மோடி அரசின் கடைசி ஜூம்லா

மோடி அரசின் சார்பாக இடைக்கால நிதி அமைச்சர் பியுஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். முழு நேர நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு போயிருப்பதால், பியுஷ் கோயல் அருண் ஜெட்லி செய்திருக்க வேண்டிய வேலையை செய்திருக்கிறார். அருண் ஜெட்லி ஆயுஷ்மான் பாரத் என்று இந்தியாவில் அவரது அரசே நடத்தும் திட்டத்தில் சிகிச்சை பெறாமல் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆகியிருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஏப்ரல் 1,  2019 முதல் மார்ச் 31, 2020 வரைக்குமான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை மோடி அரசு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் முடிந்து பா.ஜ.க தலைமையிலோ, காங்கிரஸ் தலைமையிலோ வேறு கூட்டணி தலைமையிலோ புதிய அரசு அமைவது வரையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசின் செலவுகளுக்கு நாடாளுமன்றத்திடம் பணம் கேட்பதுதான் வழக்கமான நடைமுறை (இதை vote on account என்று அழைக்கிறார்கள்). ஆனால், மோடி அரசு இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகள் பா.ஜ.கவின் மோடி அரசு உடைக்காத நடைமுறைகள், சிதைக்காத நிறுவனங்கள் இல்லை என்று சொல்லி விடலாம், அதில் இதுவும் சேருகிறது.

இந்த பட்ஜெட் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறது என்று மோடி முதலான பா.ஜ.க தலைவர்களும் ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தேர்தல் ஆண்டில் இது போல மரபை மீறி திட்டங்களை அறிவித்தது போங்காட்டம் என்று எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன. மோடி அரசின் இன்னும் ஒரு ஜூம்லா இந்த பட்ஜெட் அறிவிப்புகள். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு ஜூலையில் முழு பட்ஜெட்டில்தான் செய்ய முடியும். அதுவரை அவை வெறும் வாய்ச்சவடால்களாகவே இருக்கும். “எனக்கு மீண்டும் ஓட்டு போட்டால், நான் ஆட்சிக்கு வந்து இதை எல்லாம் உங்களுக்கு தருவேன்" என்பதுதான் மோடி சொல்லும் செய்தி.

சரி, ஜூம்லாவாக இருந்தாலும் என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

முதலில் வருமான வரிச் சலுகை.

அதற்கு முன் வருமானம் பற்றி பார்த்து விடலாம். உங்கள் வருமானம் ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டப் போவதில்லை. அதாவது மாதத்துக்கு ரூ 20,000-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வயித்துப் பிழைப்பே பெரும்பாடாக இருக்கும் போது வருமான வரியும் கட்ட முடியுமா, என்ன? இந்த வரம்புக்குள் நாட்டின் தொழிலாளர்களில், சிறு வணிகர்களில், விவசாயிகளில் 90% பேர் வந்து விடுவார்கள். எஞ்சியிருக்கும் சுமார் 5% பேருக்கு இந்த வருமான வரிச் சலுகைகள் பொருந்தும்.

இதில் என்ன சொல்கிறார்கள்? 2.5 லட்சத்துக்கும் 5 லட்சத்துக்கும் இடையே வருமானம் ஈட்டுபவர்கள் (மாத வருமானம் சுமார் ரூ 40,000 வரை) கட்ட வேண்டிய வரியான 12,500-ஐ தள்ளுபடியாக பெறலாம். அதாவது அவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது. இது பெரிய தொழிற்சாலைகளிலும், நடுத்தர அளவு நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், நடுத்தர வியாபாரிகளுக்கும் காசை மிச்சப்படுத்தும்.  இது போக சம்பளம் வாங்குபவர்கள் கழிக்க வேண்டிய தொகை அதிகரிப்பு, வங்கி வட்டி மீதான வரிச் சலுகை என்று சில அறிவிப்புகள் உள்ளன.

இரண்டாவது பெரிய திட்டம், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்பது. இதில் சுமார் 12 கோடி விவசாய குடும்பங்கள் அடங்கும். இந்தப் பணம் மூன்று  தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் போடப்பட்டு விடும்.

நல்ல விஷயம்தான்.

ஆனால், விவசாயி கேட்பது குறைந்த விலையில் விதை, உரம், வாடகைக்கு எந்திரங்கள், இன்னொரு பக்கம் விளைந்த பயிருக்கு உத்தரவாதமான கட்டுப்படியாகும் விலை. அதைப் பற்றி எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் கையில் காசாக தருகிறேன், பொழைச்சுக்கோ என்று சொல்லியிருக்கிறது மோடி அரசு.

இந்தத் திட்டத்தை டிசம்பர் 1, 2018 தேதியிலிருந்து அமல்படுத்தப் போவதாக சொல்லி ரூ 20,000 கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் கொடுத்த 20 ரூபாய் நோட்டைப் போலத்தான் இந்த இடைக்கால பட்ஜெட் உரை. 20 ரூபாய் நோட்டை கொடுத்தால் 2,000 ரூபாய் பணம் நோட்டுக்கு ஓட்டு என்ற முறையில் மார்ச் மாதம் பா.ஜ.க ஓட்டு கேட்பவர்களின் கணக்குகளுக்கு இந்தப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

ராகுல் காந்தியும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் குறைந்தபட்ச அடிப்படை வருமானம் என்ற பெயரில் எல்லோருக்கும் பணம் அனுப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அருண் ஜெட்லி போல வெளிநாடுகளுக்கு போய் சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத உழைக்கும் மக்களுக்கு அரசு மருத்துவமனையில் தரமான செலவில்லாத மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர் இவற்றை எல்லாம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி விட்டு பணமாக தருகிறார்களாம்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் தோற்றுப் போய் விட்ட அரசு கையில் காசு தருகிறோம் என்கிறது. என்னதான் நடக்கிறது?

பணம் கையில் வந்தால் அதைக் கொண்டு போய் முதலாளிகளிடம் பொருள் வாங்குவார்கள், தனியார் பள்ளியில் கட்டணம் கட்டுவார்கள், மருத்துவமனைக்கு செலவழிப்பார்கள். முதலாளிக்கு லாபம், அரசுக்கு பொறுப்பில்லை. இதுதான் பணமாக கொடுப்பதன் பின் இருக்கும் சூட்சுமம்.

குழந்தைக்கு சமைத்து சோறு போட வேண்டிய அப்பா, அம்மா, கையில் 5 ரூபாயை கொடுத்து கடையில் போய் மிட்டாய் வாங்கி சாப்பிடு என்று சொல்வது போன்றது. சமைக்க ஏற்பாடும் செய்யவில்லை, சமைக்க முடியவும் இல்லை. குழந்தைகளை பட்டினி போடுகிறார்கள்.

மூன்றாவது திட்டம்தான் மிக அயோக்கியமானது. சுமார் 10 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். 30 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 100 கட்ட வேண்டும். 18 வயதானவர்கள் மாதா மாதம் ரூ 55 கட்ட வேண்டும். 58 வயதுக்குப் பிறகு மாதம் ரூ 3,000 ஓய்வூதியம் கிடைக்குமாம்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. மாதச் சம்பளம் 7,000 8,000 10,000 வாங்கும் தொழிலாளி ஏன் 100 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கே 2,000 கோடி சம்பாதிக்கும் முதலாளியிடம் வரி போட்டு இந்தத் திட்டத்துக்கு பணம் சேர்க்க வேண்டியதுதானே?

மேலும், 58 வயதில் ஓய்வூதியம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சமீபத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு பிரச்சனை அவர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக வசூலித்த பணத்தை காணவில்லை என்பது. 2004-லிருந்து பணம் வசூலித்திருக்கிறார்கள். அவற்றை பங்குச் சந்தையில் போட்டு அதில் லாபம் வந்தால் ஓய்வூதியம் கிடைக்கும் என்றார்கள். பணம் போட்ட கம்பெனி திவாலாகி போனால் அந்தப் பணம் போனதுதான். ஓய்வூதியம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. இப்போது அதையும் தாண்டி வாங்கிய பணத்தை எல்லாம் பங்குச் சந்தையில் போட்ட கணக்கு கூட இல்லை என்று தெரிந்திருக்கிறது.

இந்நிலையில்தான் அத்துக்கூலிக்கு அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் பையிலிருந்து 50 ரூபாய், 100 ரூபாய் உருவி முதலாளிகளின் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கு பணம் சேர்க்கிறது மோடி அரசு. இந்தியாவின் சுமார் 10 கோடி தொழிலாளர்கள் ஆளுக்கு ரூ 100 செலுத்தினால் ஒரு ஆண்டுக்கு ரூ 1,000 கோடி வருகிறது. இதை எதிர்பார்த்து எச்சில் வடிய காத்திருக்கின்றன பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலைகள்.

இப்படி ஏமாற்று, மோசடி, திருட்டு அறிவிப்புகள் அடங்கிய ஜூம்லா பட்ஜெட்தான் மோடி ஆட்சியின் கடைசி காட்சியாக அரங்கேறியிருக்கிறது.

இந்த பா.ஜ.க, காங்கிரஸ் கார்ப்பரேட் கால்நக்கி கும்பல்களை ஒதுக்கித் தள்ளி விட்டு உழைக்கும் வர்க்கம் தனது ஓய்வூதியத்தையும், தொழில் செய்வதற்கான வசதிகளையும், யார் மீது எவ்வளவு வரி விதிப்பது என்பதையும்  தாமே தீர்மானிக்கும் வகையில் ஒரு அரசை உருவாக்குவதுதான் இதற்கு தீர்வு.

கார்ப்பரேட் சாதி இந்துத்துவ அரசியலின் மூக்கில் குத்திய ஓவியர் முகிலனுக்கு பாராட்டு

பிப்ரவரி 1-ம் தேதி மாலை ஓவியர் முகிலனை பாராட்டி பெரியார் விடுதலை கழகம் சார்பாக ஒரு கூட்டம் நடத்தினார்கள். மயிலாப்பூர், சிட்டி சென்டருக்கு பின்புறம் பெரியார் பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. வெளியில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

சிறியதாக இருந்த அந்த அலுவலகத்துக்குள் நிறைய பேர் கூடி விட்டார்கள்.

திராவிடர் விடுதலை கழகம் என்பது பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தின் வாரிசு. திராவிடர் கழகத்திலிருந்து பெரியார் திராவிடர் கழகம் என்று பிரிந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பின்னர் அதுவும் இரண்டாக பிரிந்து திராவிடர் விடுதலை கழகம் என்ற இந்த அமைப்பு உருவானது. இதில் முக்கியமாக கொளத்தூர் மணி என்பவர் தலைவராகவும், விடுதலை ராஜேந்திரன் என்பவர் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்கள்.

ஓவியர் முகிலன் கார்ப்பரேட் அரசியலையும், இந்துத்துவ சாதி அரசியலையும் எதிர்த்து ஓவியங்கள் வரைபவர். கடந்த 15 ஆண்டுகளாக தாமிரபரணி தண்ணீரை கோக்கோ கோலாவுக்கு கொடுப்பதை எதிர்த்து, மகாராஷ்டிராவில் உள்ள கயர்லாஞ்சி என்ற ஊரில் சுரேகா அவரது மகள் பிரியங்கா இருவரும் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டது பற்றி, கந்தமாலில் சாதிக் கொடுமையை தாங்க முடியாமல் மதம் மாறிய பழங்குடி மக்களின் கிராமத்தையே மதவெறியர்கள் கொளுத்தியது ஆகிய பல பிரச்சனைகள் பற்றி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை ஒட்டி அந்தந்த காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் 34-ஐ சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த ஒரு நாட்டுப்புறக் கலைக்கான திருவிழாவில் காட்சிக்கு வைத்திருக்கிறார். அதில் நமது நாட்டு மக்கள் மீது அன்னிய கார்ப்பரேட்டுகளின் தாக்குதலை ஆதிக்கத்தை பாரத மாதாவின் மீது 'பாலியல்' சீண்டல்கள் பாய்வது போல வரைந்திருந்த ஓவியம் பா.ஜ.கவின் எச்.ராஜாவின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது. 'நாட்டை பாரதமாதா என்று சித்தரிக்கும் நீங்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் யார் வேண்டுமானாலும் நமது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு திறந்து விட்டிருப்பது நீங்களே சொல்லிக் கொள்ளும் பாரதமாதாவை பாலியல் ரீதியாக தாக்குவதை அனுமதிப்பது' என்று உருவகித்திருக்கிறார். அதை சமீபத்தில் பெருமளவு சர்ச்சைக்குள்ளான பெண்களை பாலியல் ரீதியில் சீண்டும் பெரிய மனிதர்கள் பற்றிய #MeToo என்பதுடன் இணைத்திருந்தார்.

இன்னொரு பிரச்சனைக்கு உள்ளான ஓவியம், நந்தினி என்ற தலித் பெண் மணிகண்டன் என்ற இந்து முன்னணி பிரமுகரால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு இந்து முன்னணி கும்பல் நந்தினியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை பிறப்புறுப்பு வழியாக குத்தி வெளியில் எடுத்து, அந்தப் பெண்ணை வெட்டி கிணற்றில் வீசி எறிந்த கொடூரத்தை பற்றியது. அதில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஈட்டி தாக்குவதாக வரையப்பட்டிருந்தது. ஈட்டி என்பது இந்துத்துவ கும்பல் குஜராத்தில் 3,000 இசுலாமியர்களை படுகொலை செய்த போது கையில் ஏந்தியிருந்த ஆயுதம். நமது கிராமங்களில் அய்யனார் சிலை முன்பு நிற்கும் அப்பாவி ஈட்டி இல்லை அது இந்துத்துவ கும்பல் கையில் கொலைகார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அதை காட்சிப்படுத்தும் வகையில் வரைந்த ஓவியத்தை "பெண்களை இழிவுபடுத்தி விட்டார், ஈட்டியை இழிவுபடுத்தி விட்டார்" என்று பழிக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே ஓவியங்களை சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் வாங்கிச் சென்று காட்சி நடத்தியிருந்தார்கள். அப்போது எதுவும் பிரச்சனை செய்யாத பா.ஜ.கவினர் இப்போது லயோலா கல்லூரியில் நடப்பதால் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். லயோலா கல்லூரியை குறி வைக்கின்றனர்.

முகிலனுக்கு நிறைய நிதி வருவதாக பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில், அவரது ஓவியங்கள் 20 ரூபாய் அட்டைகளில் வரையப்படுபவைதான். ஆனால், அவை சொல்லும் அரசியல், சொல்லும் வடிவம், அதன் கலை உணர்ச்சி அவர்களுக்கு பீதியை உருவாக்குகிறது. முகிலன் மீது போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் எச்.ராஜா. அதைத் தொடர்ந்து முற்போக்கு ஜனநாயக சக்திகள் முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தன.

இதை ஒட்டித்தான் திராவிடர் விடுதலை கழகம் முகிலனுக்கு பாராட்டு விழா நடத்தியது. முதலில் மனிதி இயக்கத்தைச் சேர்ந்த செல்வி பேசினார்.

தொடர்ந்து பேசிய விடுதலை ராஜேந்திரன் பெரியார் இயக்கமும் பார்ப்பன எதிர்ப்பும்தான் தமிழக அரசியல். அன்று வர்க்கம் பேசியவர்கள் எல்லாம் இன்று பார்ப்பனீயம் பற்றி, பிள்ளையார் பற்றி, ராமர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, பெரியார் செய்தது போன்ற வேத, புராண புரட்டுக்களை அம்பலப்படுத்தி மக்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கும் பிரச்சாரத்தை நாம் கைவிட்டிருக்கிறோம். அதை மீண்டும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்று திராவிடர் கழக அரசியலை பேசினார்.

அடுத்து முகிலன் சிறப்பாக பேசினார். மேலே சொன்ன விபரங்களை சொல்லி விட்டு தனது "ஓவியத்துக்குப் பின் இருக்கும் அரசியல் கார்ப்பரேட் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல். அதன் மீதான எதிர்ப்பு ஒரு கலைஞனாக என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுகிறது. அது கோபமாக இருக்கிறது, வன்முறையாக இருக்கிறது, மனதை புண்படுத்துவதாக இருக்கிறது என்றால் உண்மைதான். ஏனென்றால் அந்த கார்ப்பரேட் இந்துத்துவ அடக்குமுறைகள் கோபமாக உள்ளன, வன்முறையாக உள்ளன, மனதை புண்படுத்துவதாக உள்ளன. அதை எதிர்த்த எனது கலை வடிவிலான போராட்டத்தை நான் தொடர்ந்து செய்வேன்" என்றார். "உதாரணமாக, நம் நாட்டின் ஒவ்வொரு முக்கிய ஆறுகளிலிருந்தும் கோக், பெப்சி என்று பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் உறிஞ்சுகின்றன. குஜராத்தில் கொல்லப்பட்ட 3,000 இசுலாமியர்களின் பிணங்கள்தான் மோடியின் முகம், இதை நான் எங்கு வேண்டுமானாலும்" சொல்வேன் என்று பேசினார்.

கூட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அரசியல் முன்னணியாளர்கள் வந்திருந்தார்கள். முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்கள்.

ஜோடியாக கைகோர்த்து நிற்கும் கார்ப்பரேட் - சாதி இந்துத்துவ அரசியலை ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்த்து நிற்க வேண்டிய காலம் இது. இதை எதிர்க்காவிட்டால் நம் நாட்டு தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டு விடும். 'நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அடங்கி இருந்தால் மூன்று வேளை சோறு பிச்சையாக போடுகிறோம். தின்று விட்டு கம்மென்று இருக்க வேண்டும். எதிர்த்து கேட்டால், கருத்து சொன்னால் அடிதான், உதைதான்' என்று உழைக்காமல் கொழுக்கும் சாதியினரும், கார்ப்பரேட் முதலாளிகளும் சொல்வார்கள். அவர்கள் போடும் கோட்டுக்குள் நாம் வாய் பொத்தி, கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

புதன், பிப்ரவரி 01, 2012

பொருளாதார பாடம் கசப்பது ஏன்?


இப்போதைய வாசிப்பு

இப்போது 3 புத்தகங்கள் வாசிக்கும் மேசையில் இருக்கின்றன.

  • முதலாவது அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற அ.அனிக்கின் எழுதிய சோவியத் வெளியீடு. 
  • இரண்டாவது A History of Capitalism (1500-2000) என்ற Michael Beud எழுதிய புத்தகம். பிரெஞ்சு பொருளாதார பேராசிரியரான அவர் 1980ல் ஆரம்பித்து 1999 பதிப்பில் நூற்றாண்டின் இறுதி வரைக்குமான வரலாற்றையும் சேர்த்து பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த புத்தகம். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. 
  • மூன்றாவதாக கம்யூனிஸம் என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம். 

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் என்ற புத்தகம் மனித சமூகத்தில் பொருளாதார சிந்தனைகளின் வரலாற்றை விவரிக்கிறது. அரிஸ்டாட்டில் அரசியல் பொருளாதாரம் பற்றி கொண்டிருந்த கருத்துக்களில் ஆரம்பித்து 16ம் நூற்றாண்டிலிருந்து இங்கிலாந்திலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், ஹாலந்திலும் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த, பொருளாதார கோட்பாடுகளில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பற்றி விளக்குகிறது.

கேபிடலிசத்தின் வரலாறு என்ற புத்தகம் 18ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்தான வளர்ச்சிகள், 18ம் நூற்றாண்டின் புரட்சிகள், தொழில் மயமான வளர்ச்சி, காலனி ஆட்சி, உலகப் போர்கள், 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நடந்து நிகழ்வுகள் என்று புள்ளிவிபரங்களுடனும் தகவலுடனும் பேசுகிறது.

அரவிந்தன் நீலகண்டனின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸிலிருந்து துவங்குகிறது. மார்க்சியம் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கம்யூனிசம் என்பது ஒரு வில்லத்தனமான கோட்பாடு என்பதை நிறுவுவது அந்த புத்தகத்தின் நோக்கம். மார்க்ஸ், எங்கெல்ஸ், அதன் பிறகு ரஷ்ய தலைவர்கள், சீனா, கம்போடியா, கியூபா என்று சோசலிச நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை தனது பார்வையில் வண்ணம் அடித்து விளக்குகிறர். கம்யூனிசம் என்பது பஞ்சம், படுகொலை , பேரழிவுக்கு வழி வகுக்கும் என்பது புத்தகத்தின் தலைப்பிலிருந்து கடைசி வரி வரை சொல்லப்படுகிறது.

பொருளாதாரம் வாசிப்பு அனுபவங்கள்

நான் முதலில் பொருளாதாரம் பற்றி படிக்க ஆரம்பித்தது கல்லூரியில். தோல் தொழில்நுட்பம் படித்தாலும், கல்லூரியின் இறுதி ஆண்டில் 7வது பருவத்தில் ஒரு மேலாண்மை பாடமாக பொருளாதாரம் இருந்தது.  அந்த வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பிடித்திருந்தன. அதிலிருந்து தேடிப்பிடித்து சில அமெரிக்க பொருளாதார பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அமெரிக்க தகவல் மையத்தின் நூலகத்தில் உறுப்பினராக இருந்ததால் Economics  என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த நான்கைந்து புத்தகங்களை படிக்க முடிந்தது.

டிமாண்ட், சப்ளையிலிருந்து ஆரம்பித்து உற்பத்தி, சந்தைகள், நுகர்வோர், போட்டி, போட்டியின்மை, ஏகபோகம், குடும்பங்களின் வருமானம், தனிநபரின் நிறைவு, உற்பத்தியில் செலவுகள், தேசிய வருமானம், வேலை வாய்ப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், வரி விதிப்பு, அரசின் அவசியம், அரசின் பணிகள், உலக வர்த்தகம் என்று எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான தலைப்புகள் இருந்தன.

இவற்றிற்கெல்லாம் முதன்மையாக இருந்தது பால் சாமுவேல்சன் எழுதிய புத்தகம். அதுதான் பல பல்கலைக் கழங்களில் பாடநூலாக பின்பற்றப்பட்டது. 1980களிலேயே 12வது பதிப்பு வந்து விட்டதாக நினைவு. இப்போது 20வது பதிப்புக்கு அருகில் இருக்கிறது என்று நினைக்கிறேன். பிந்தைய பதிப்புகளில் நார்ட்ஹவுஸ் என்பவருடன் இணைந்து நூலை எழுதி வெளியிட்டார்.

பொருளாதார பாடத்தில் இரண்டு பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது தனிநபர், குடும்பங்கள், நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, எப்படி முடிவுகள் எடுக்கின்றன என்பதைப் பற்றியது, மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, நாடுகள், சமூங்கள் எப்படி செயல்படுகின்றன, முடிவுகள் எடுக்கின்றன, பிற நாடுகளுடன் உறவாடுகின்றன என்பதைப் பற்றியது.

மைக்ரோ எகனாமிக்ஸ் கொஞ்சம் விறைப்பாக செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். மேக்ரோ எகனாமிக்ஸ் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் நமது வாழ்க்கைக்கு மைக்ரோ எகனாமிக்ஸ்தானே தேவையானது என்று நினைத்துக் கொள்வேன். அதுதான் நாம் எப்படி முடிவு எடுக்கிறோம், எப்படி பொருட்களை நுகர்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி பேரம் பேசுகிறோம் என்பதை விளக்குகிறது.

பொருளாதார பாடப்புத்தகங்களை தவிர 20ம் நூற்றாண்டின் மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் எழுதிய பொதுவான புத்தகங்களையும் படித்தேன். குறிப்பாக கேல்பிரித் என்பவர் எழுதிய affluent society முதலான புத்தகங்கள். ஆல்வின் டோப்ளர் எழுதிய future shockIn search of excellence என்ற ஆய்வு நூல். முந்தையதில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித வாழ்க்கை எப்படி மாறும் என்று பக்கம் பக்கமாக விளக்கியிருப்பார். இரண்டாவது நூலில் அமெரிக்காவின் தலை சிறந்த நிறுவனங்கள் எப்படி தரத்தையும், வாடிக்கையாளர் சேவையையும் சாதிக்கின்றன என்று பல நிறுவனங்களை ஆய்வு செய்த நூல். Small is beautiful என்ற நூல் சூமாகர் எழுதியது. 20ம் நூற்றாண்டின் பெரும் நிறுவனங்கள், பெருமளவிலான உற்பத்தி என்பது மாறி சிறு அளவிலான உற்பத்தியாக உருமாறும் என்பது அவரது கோட்பாடு.

கல்லூரியில் படித்த மற்ற எந்த பாடத்தையும் விட இந்த பொருளாதாரம் தொடர்பான வாசிப்பு மிகவும் பொருள் பொதிந்ததாக தோன்றியது.

நடைமுறை பொருளாதார வாசிப்பு

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் இத்தகைய புத்தகங்களை படிப்பதை தொடர்ந்தேன். கையில் காசு கிடைத்ததால் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகம் வாங்கிக் கொண்டேன். இந்தூரின் நடைபாதைக் கடைகளில் வாங்கி குவித்தவை தனி. அந்தக் கட்டத்தில் சுமார் 1994 வாக்கில் தினமும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். மன்மோகன் சிங்/நரசிம்ம ராவ் சந்தைப் பொருளாதாரத்தை அவிழ்த்து விட்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த கால கட்டம். சுமார் 2 ஆண்டுகள் அந்த நாளிதழை படித்துக் கொண்டிருந்தேன்.

எகனாமிக் டைம்ஸ் இந்தூருக்கு பம்பாயிலிருந்து வரும். மாலையில்தான் வீட்டுக்குக் கொண்டு போடுவார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலைக்குப் போகும் பேருந்து பயணத்தில் அதைப் படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவும், எகனாமிக் டைம்சும் குப்பை பத்திரிகைகளாக மாறுவதற்கு முந்தைய கட்டம். இந்திய பொருளாதாரம், வணிக நிறுவனங்கள், அரசு கொள்கைகள், பங்குச் சந்தை, விலை வாசி என்று பொருளாதாரம் சார்ந்த விபரங்களை அதில் படிக்க முடிந்தது.

படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பொருத்தமில்லாத தலைப்புகள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவை செய்திகளுக்கு துணையாக அணிவகுக்க ஆரம்பித்திராத காலகட்டம் அது.

இந்த நாளிதழிலும் மைக்ரோ எகனாமிக்ஸ் குறைந்த அளவிலேயே வந்தது. முதலீட்டு ஆலோசனைகள், வரி விதிப்பு தொடர்பான கேள்வி பதில் என்று ஓரிரு பக்கங்களோடு அது நின்று விட்டிருந்தது. எந்த ஒரு செய்தி அலசலையும் எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டின் அரசியல், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி. உலக பொருளாதார நிலைமை இவை மூன்றுமே தலை காட்டி விடும்.

டாடா ஸ்டீல் பற்றி அலசல் இருந்தால் அதில் இந்த மூன்று முக்கிய காரணிகளையும் பற்றி பேசியிருப்பார்கள். நிறுவனத்தின் தொழிலாளர் கொள்கை, மொத்த வருமானம், லாபம், எதிர் கால திட்டங்கள் இவற்றின் பின்னணியிலேயே பேசப்பட முடியும்.

மைக்ரோ எகனாமிக்ஸ் என்பது செயற்கையானது என்று தோன்றினாலும், நமக்கென்ன தெரியும், மெத்தப்படித்த பொருளாதார ஆசிரியர்கள் அப்படிப் பிரித்து விளக்கினால் ஏதாவது பொருள் இருக்கத்தான் செய்யும் என்று அதை மனதுக்குள்ளேயே அழுத்திக் கொள்வேன். மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது இளங்களை பொருளாதார வகுப்புகளில் மார்ஷல் என்ற இங்கிலாந்து பேராசிரியர் எழுதிய மைக்ரோ எகனாமிக்ஸ் பாட புத்தகங்கள்தான் முதன்மையாக போதிக்கப்படுகின்றன என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். எகனாமிக்ஸ் படிக்க யாரும் ஆர்வமாக முன் வராதது புரிந்தது போல இருந்தது.

2006ல் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆன பிறகு சாமுவேல்சனின் புத்தகத்தில் தரப்படுள்ள கோட்பாடுகளை சிறு சிறு பதிவுகளாக எழுதலாம் என்று முயற்சித்து கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளையும் எழுதினேன். அப்போது எகனாமிக் டைம்ஸ் படிக்க முடியாதபடி (எனக்கு) ஆகி விட்டிருந்தது.

பொருளாதார வரலாற்று நாயகர்கள்

சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் புத்தகத்தில் பொருளாதாரவியலின் வரலாறுஆதம் ஸ்மித்திடமிருந்து ஆரம்பிக்கும். அவர்தான் நவீன பொருளாதாரவியலின் தந்தை. நாடுகளின் செல்வத்துக்கு காரணங்களைப் பற்றிய ஆய்வு என்ற நூலை எழுதியவர்.

அடுத்ததாக டேவிட் ரிக்கார்டோ என்பவர்.

மூன்றாவதாக காரல் மார்க்சின் மூலதனம் என்ற ஆய்வு நூல், அதன் விளைவுகள்.

1930களில் கீன்ஸ் என்ற இங்கிலாந்து பிரபு எழுதிய நாட்டின் வேலை வாய்ப்பு, வளர்ச்சி பற்றிய புத்தகம்.

1960களில் மில்டன் பிரீட்மேன், கால்பிரித் போன்றவர்களுடன் முடியும்.

முந்தைய பதிப்புகளில் காரல் மார்க்சுக்கு நான்கைந்து பக்கங்கள் ஒதுக்கி அவர் கணித்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள், அது எப்படி தவிர்க்கப்பட்டு வருகிறது என்று விளக்கியிருப்பார்கள். சமீபத்திய பதிப்புகளில் அது ஒரு பெட்டிக் குறிப்பு அளவுக்குச் சுருங்கியிருந்தது.

பொருளாதாரவியலில் முரண்நிலைகள்

பொருளாதார துறையில் அரிஸ்டாடில் காலத்திலிருந்தே எதிரெதிர் கோட்பாட்டு முகாம்கள் செயல்பட்டே வந்திருக்கின்றன. ஆதம் ஸ்மித், கீன்ஸ், பிரீட்மேன் போன்றவர்கள் ஒரு முகாம் என்று வைத்துக் கொண்டால் ரிகார்டோ, மார்க்ஸ், கேல்பிரித் போன்றவர்களை எதிர் முகாமில் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த கோட்பாட்டு முரண்பாடுகளைப் பற்றி அந்த பாடப் புத்தகங்கள் பேசுவதில்லை.

தண்ணீர்

சாமுவேல்சனின் புத்தகத்தில் ஒரு முக்கியமான கேள்வி.

'பொருளின் விலை அதன் பயன்பாட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது' என்பது ஒரு கோட்பாடு. 'அப்படியென்றால் மிகவும் பலனளிக்கும் தண்ணீரின் விலை குறைவாகவும், பயன் மதிப்பு இல்லாத வைரத்தின் விலை மிக அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன?' என்பது கேள்வி.

அதாவது புத்தகம் சொல்லித் தரும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் முரண்பாடு காட்டும் கேள்வி. வைரத்துக்கும் தண்ணீருக்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக வெளிப்படையாக தெரிந்தாலும் இதை மாதிரி மற்ற பொருட்களிலும் இதே முரண்பாடுகள் இருக்கின்றன.

அதை விளக்க இன்னொரு கோட்பாடு வரும். 'பொருளின் விலை பயன்பாட்டைப் பொறுத்து அல்ல, கடைசி அலகின் கூடுதல் பயன்பாட்டைப் பொறுத்தது (marginal utility)' என்பதுதான் அந்த கேள்விக்கு பதில்.

ஒரு பொருளாதார மனிதனுக்கு முதல் 1 லிட்டர் தண்ணீரின் பயன்பாடு வைரத்தை விட உயர்ந்தது. தண்ணீரே கிடைக்கா விட்டால் வைரத்தைக் கூட கொடுத்து குடிப்பதற்கு 1 லிட்டர் தண்ணீர் வாங்கத் தயாராக இருப்பார். அடுத்தடுத்து 1000 லிட்டர், 10000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் போது அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது, ஒரு உணவுப் பொருளை அதிகமாக சாப்பிடச் சாப்பிட திகட்டுவதைப் போல. வைரத்தின் உயர்ந்த விலைக்குக் காரணம் அது குறைவாக கிடைப்பது, அதனால் இறுதி அலகின் பயன்பாடு அதிகம். தண்ணீரின் அதிக விலைக்கு காரணம் அது அதிகமாக கிடைப்பது.

இது பாடப் புத்தகம் நிறைய கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று படித்து விட்டு நகர்ந்து விடுவோம். அதை நம்பி நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அலசலில் மிகப்பெரிய ஓட்டை இது கேள்வியை அதற்கு தொடர்புள்ள முக்கியமான பகுதியை விட்டு விட்டு பரிசீலிக்கிறது என்பதே. தண்ணீர் அதிகமாக கிடைப்பதற்கு காரணம் என்ன? வைரம் குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? ஒரு பொருள் கிடைப்பதை நிர்ணயிப்பது எது?


இந்த கேள்விக்குள் எங்கு வருவோம் என்றால், தொழிற்சாலையின் உற்பத்தி செலவுகள் பற்றி பேசும் போது. ஒரு தொழிலாளர் அல்லது இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது அதை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் இறுதி கூடுதல் அலகைப் பொறுத்தது என்று இன்னும் ஒரு சிக்கலான கோட்பாட்டை அறிமுகம் செய்வார்கள். அதனால்தான் மைக்ரோ எகனாமிக்ஸ் வறட்சியாக பட்டது என்று நினைக்கிறேன்.


நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தருணம்

ஒருவருக்கு வயிற்று வலி என்றால் அதற்கு பல காரணங்கள்  இருக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எல்லா உறுப்புகளுக்கும் அதில் பங்கு அல்லது அதன் விளைவில் பங்கு உண்டு. வயிற்று வலி காரணமாக சரியாக சாப்பிடா விட்டால் உடம்பில் எந்த உறுப்புக்கும் சக்தி கிடைக்காத நிலை ஏற்படும். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் யாராவது வயிற்று வலியைப் பற்றி பேசவோ, ஆய்வு செய்யவோ, மருந்து கொடுக்கவோ முயற்சிக்கிறார்கள் என்றால் நமக்கு சிரிக்கத் தோன்றும்.

அதே முயற்சிதான் பொருளாதார பாடத்திலும் கடந்த 200 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார பாடத்திலிருந்து விரிவடைந்து முழு பொருளாதாரத்துக்கும் உலக சமூகத்துக்கும் அப்படித்தான் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார்கள். ஆதம் ஸ்மித்தின் பொருளாதார மனிதனின் சுயநலத்தில் ஆரம்பித்து, கீன்ஸின் முழு வேலை வாய்ப்புடனான சமூகத்தை உருவாக்க அரசின் பங்கு என்பது வரை முழுமையை புறக்கணித்து விட்டு பகுதிக்கு மட்டும் களிம்பு போடும் வேலையை செய்கிறார்கள்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி செய்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களா? அல்லது முட்டாள்களா?

சார்புக் கொள்கையை உருவாக்கிய 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு குவாண்டம் அறிவியலை ஏற்றுக் கொள்வதில் மறுப்பு இருந்தது. 'கடவுள் பகடையாடுவதில்லை' என்று சொல்லி அதை நிராகரித்தார். குவாண்டம் கோட்பாடுகளின்படி ஒரு துகளின் இடம் அல்லது வேகம் இரண்டையும் முற்றிலும் துல்லியமாக தீர்மானிக்க முடியாது. அது கடவுளால் கூட முடியாது என்பது அதன் நீட்சி. கடவுளை நம்பும் ஐன்ஸ்டைனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் குவாண்டம் அறிவியலுக்குள் அவர் வேலை செய்யவில்லை.

இயற்கை அறிவியலிலேயே அறிவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட தாக்கங்கள் இருக்கும் போது சமூக அறிவியலான பொருளாதாரவியலில் இந்த தாக்கம் இரண்டற கலந்து இருந்தது.

அறிவியல் அணுகுமுறை தரும் முடிவுகள்

பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்ந்து, பொருளின் விலையின் இரண்டு பக்கத்தையும் ஆய்வு செய்து பார்க்கும் போது கிடைக்கும் முடிவுகள் அதிர்ச்சி தரும்படி இருந்தன. ரிக்கார்டோதான் பொருளின் மதிப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் ஆராய்ச்சி செய்து முழுமையாக வெளிப்படுத்தியவர். அதன் விளைவுகளை விளக்கிச் சொல்ல அவரது வளர்ப்பும் சூழ்நிலையும் வழி தரவில்லை. அவர் காலத்திய மற்ற அறிஞர்கள் அவரை நிராகரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

காரல் மார்க்ஸ் அந்த விளைவுகளை அவற்றின் இயல்பான இறுதி நிலை வரை விளக்கி மூலதனம் எழுதினார். அதற்கான நேர்மையான பதில் இன்று வரை முதலாளித்துவ பொருளாதாரவியலில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேக்ரோ, மைக்ரோ எகனாமிக்ஸ், இறுதி அலகின் கூடுதல் பயன்பாடு,  என்று செயற்கையாக கோட்பாடுகளை உருவாக்கி மழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த கோட்பாடுகள் தலை சிறந்த அறிஞர்களால் வளர்த்து நிறுவப்பட்டு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

விளைவுகளை நான் காலனி படையெடுப்புகளாக, உலகப் போர்களாக, கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளாக, போபால் விபத்தாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக, 2G ஊழலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்கிறார்கள். காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள். இஸ்லாமிய ஜிகாத், நாடு பிடிக்கும் ஆசை, இன வெறி, சர்வாதிகாரி என்று பல காரணங்கள் பல வழிகளில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் எந்த பிரச்சனையும் இது வரை தீர்ந்ததாக வரலாறு இல்லை. பிரச்சனைகள் மறக்கப்பட்டு விடுகின்றன, அல்லது அடுத்து வரும் இன்னொரு பிரச்சனையால் மறைக்கப்பட்டு விடுகின்றன.

பொருளின் மதிப்பு

பொருளின் விலை அல்லது மதிப்பு குறித்த கேள்விதான் இதற்கு அடிப்படை. பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது எது?

பொருளின் விலை அல்லது மதிப்பை தீர்மானிப்பது, 'பொருளை உருவாக்க செய்யப்படும் வேலையின் அளவு'. வைரத்தை தோண்டி எடுத்து பட்டை தீட்டி கடைக்கு கொண்டு வந்து விற்க நிறைய வேலை தேவைப்படுகிறது. அதனால் அதன் விலை அதிகம். தண்ணீர் வீட்டிலிருந்து வெளியில் போய் ஏரிக் கரைக்குப் போனால் கிடைக்கிறது, அதனால் அதன் விலை குறைவு.

இங்கு இரண்டாவதாக புரிந்து கொள்வதற்கு சிரமமான கடைசி அலகின் கூடுதல் மதிப்பு என்ற கோட்பாடு தேவையே இல்லை. ஒரு பொருள் எவ்வளவு பயன் மதிப்பு உடையதாக இருந்தாலும் அதன் உற்பத்தி உழைப்புதான் அதன் விலையை தீர்மானிக்கிறது. பயன் மதிப்பு இல்லாத பொருளுக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டாலும் விலை அந்த அளவு கிடைக்காமல் போய் விடலாம். உதாரணமாக ஒருவர் பல நாட்கள் உழைத்து ஒரு ஓவியம் வரைகிறார், யாரும் அதை வாங்க முன்வரவில்லை (பயன் மதிப்பு இல்லை) என்றால் அதற்கு விலை இல்லை, அல்லது விலை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பயன் மதிப்பினால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை உற்பத்தி செலவுதான் என்பதை கவனிக்க வேண்டும். அந்த உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காவிட்டால் அதன் உற்பத்தி நின்று விடும்.

பயன் மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு செயற்கையானது. அதை தாங்கிப் பிடிக்க செயற்கையான பல நடவடிக்கைகள் தேவை, கீன்சின் முழு வேலை பொருளாதார கோட்பாட்டிலிருந்து பிரீட்மேனின் பணக் கொள்கை வரை பல வழியில் அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.

திங்கள், டிசம்பர் 26, 2011

தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வியாபார நியாயமும்

15ம் நூற்றாண்டுக்கு முன்பு எளிதில் தாண்ட முடியாத அட்லாண்டிக் பெருங்கடலால் பிரிக்கப்பட்ட ஐரோப்பா கண்டத்துக்கும் அமெரிக்க கண்டங்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான கடல் வழி தொடர்பே இருந்தது.  15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் கடல் வழி பயணத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அட்லான்டிக் பெருங்கடலை கடந்து போகும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதை 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும் தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க நிலப்பரப்புகளுக்கிடையே உடனடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான இணைய தொழில் நுட்பம் உருவானது.

15ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பெருகி வரும் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரித்துச் செல்ல புதிய லாபகரமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகரித்தது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைத்த தங்கத்தை பரிமாறி இந்தியாவில் கிடைத்த வாசனை பொருட்களை வாங்கி வர மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க விரும்பினார்கள் ஐரோப்பியர்கள். 1494வாக்கில் போர்ச்சுக்கீசிய அரசர் பல மேற்கு ஆப்பிரிக்க அரசுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதன் மூலமாக, ஆப்பிரிக்காவின் சமூகங்களுடன் பகைமை இல்லாமல் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக வர்த்தக மையம், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் முதலான நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், மூலதனம் நாடு விட்டு நாடு பாய்வதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலத்தையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றி முதலாளித்துவ லாபங்களை ஈட்டுவதற்கான ஐரோப்பியர்களின் முயற்சியின் விளைவாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தேயிலை, புகையிலை, பருத்தி, கரும்பு தோட்டங்களில் பயிர் செய்து, அறுவடை செய்து, பதப்படுத்துவதற்கு பெரும் அளவிலான உழைப்பு தேவைப்பட்டது.  மலிவாக கிடைத்த பெரும் அளவிலான நிலங்களை கைப்பற்றி நிலவுடமையாளர்கள் உருவாகி தொழிலாளர்களை தேடினார்கள். அப்படி தொழிலாளர்களாக ஐரோப்பாவிலிருந்து வந்த சுதந்திர மக்கள் கூட சிறிது காலத்திலேயே நிலம் வாங்கி நிலவுடமையாளர் ஆக முடிந்தது. இதனால் வேலை செய்பவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அமெரிக்க பழங்குடி மக்களை கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குவதில் இயற்கையான பல சிக்கல்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வேகமாக வளர்ச்சி பெற்றிருந்த நுகர்வு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் மேலாண்மை பணிகளைச் செய்ய அமெரிக்காவில் நிலவிய தொழிலாளர் முறைகளும் சம்பள விகிதங்களும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது. மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது பெருகி வந்த மூலதனம்.

16,17ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் உழைப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை பிடித்துச் சென்று அமெரிக்காவில் வேலையில் ஈடுபடுத்தும் வர்த்தகம் ஆரம்பித்தது. போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களும், குற்றம் புரிந்தவர்களும் மன்னர்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆனால், பெரும்பான்மையான அடிமைகள் ஆப்பிரிக்க வியாபாரிகள் ஐரோப்பியர்களுடன் கூட்டாக ஊர்களுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்துவதன் மூலம் பிடிக்கப்பட்டு விற்கப்பட்டவர்கள். வணிக ரீதியிலான அடிமை வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க போரின் விளைவாக கைதிகள் பிடிக்கப்படுவது குறைந்து போய் கைதிகள் பிடிப்பதற்காக போருக்குப் போவது வாடிக்கையாகிப் போனது.  அருகாமையிலுள்ள தேசிய இனங்களைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களை பிடித்து அடிமைகளாக தொழிலாக வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் பலர் செயல்பட்டனர்.

மனிகோங்கோ என்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர் போர்ச்சுக்கீசிய மன்னருக்கு எழுதிய கடிதத்தில் "எமது குடிமக்களில் பலர் உங்கள் குடிமக்களான வர்த்தகர்கள் கொண்டு வரும் போர்ச்சுக்கீசிய பொருட்களின் மீது ஆசை வைக்கிறார்கள். இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சுதந்திர கறுப்பு மனிதர்களை பிடித்து விற்று விடுகிறார்கள். கைதிகளை இரவின் மறைவில் கடற்கரைக்கு கடத்திச் செல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் கையில் அடிமைகள் ஒப்படைக்கப்பட்டவுடன் அடையாளத்துக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியின் மூலம் சூடு வைக்கப்படுகிறார்கள். தினமும் வர்த்தகர்கள் எங்கள் மக்களை - இந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் பிரபுக்களின் மகன்களை, எனது சொந்த குடும்பத்தினரை கூட பிடித்து செல்கிறார்கள். இந்த அநியாயமும் அடாவடியும், எங்கள் நாட்டில் மக்கள் தொகையை முழுவதும் அழித்து விட்டிருக்கிறது. எங்களது நாட்டுக்கு நீங்கள் மதகுருக்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மட்டும் அனுப்புங்கள், மற்ற பொருட்கள் தேவையில்லை. எங்கள் நாட்டில் அடிமைகள் வர்த்தகம் அல்லது அடிமைகள் கடத்தல் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அடிமை வியாபாரிகளில் போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பேனியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் அமெரிக்கர்கள் முதல் இடங்களை வகித்தார்கள். ஆப்பிரிக்க கடற்கரையில் தமது அலுவலகங்களை வைத்திருந்து, ஆப்பிரிக்க பழங்குடி தலைவர்களிடமிருந்து மனிதர்கள் விலைக்கு வாங்கினார்கள். இப்போதைய மதிப்பீடுகளின் படி சுமார் 1.2 கோடி மக்கள் அட்லான்டிக் தாண்டி அனுப்பப்பட்டார்கள் என்று தெரிகிறது.  அடிமை முறை மூன்று பகுதியிலான பொருளாதார சுழற்சியின் ஒரு கண்ணியாக விளங்கியது. அது நான்கு கண்டங்களையும், 4 நூற்றாண்டுகளையும் கோடிக்கணக்கான மக்களையும் உள்ளடக்கியிருந்தது.

'20ம் நூற்றாண்டில் வளர்ந்திருந்த தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் ஆகும் செலவில் நூற்றில் சில பகுதி செலவில் இந்தியாவில் செய்து கொள்ள முடியும்' என்று கண்டு கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு டாடாவின் டிசிஎஸ், நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் கங்காணிகளாக செயல்பட ஆரம்பித்து வெகு வேகமாக வளர்ந்தனர்.

அடிமை வர்த்தகம் முக்கோண வர்த்தகம் என்று அழைக்கப்பட்டது. முக்கோணத்தின் ஒரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒவ்வொரு கைதிக்கும் ஆப்பிரிக்க அரசர்கள் துப்பாக்கிகள், ஆயுதங்கள், மற்றும் உற்பத்தி பொருட்கள் போன்ற பொருட்களை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். முக்கோணத்தின் இரண்டாவது பக்கத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்கள்அமெரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். முக்கோணத்தின் கடைசி பக்கமாக அமெரிக்காவிலிருந்து அடிமை உழைப்பு மூலம் உருவான பண்ணைகளின் விளைபொருட்களான பஞ்சு, சர்க்கரை, புகையிலை, மோலாசஸ், ரம் போன்றவை ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன.

நவீன அடிமை வியாபாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உழைப்பு, அதில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்கள் உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை வளர்த்தன. டாடா ஸ்டீல் இங்கிலாந்தின் கோரஸ் ஸ்டீலையும், டாடா மோட்டார்ஸ் லேண்ட்ரோவர்-ஜாகுவார் நிறுவனங்களையும் விழுங்குவதற்கு இந்த வர்த்தகத்தில் ஈட்டிய டாலர்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய உழைப்புக்கு மாற்றாக இந்தியாவுக்குள் KFC, Pizza Hut, Pepsi, Coca Cola போன்ற அமெரிக்க பொருட்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றன. கூடவே ராணுவத்துக்கு ஆயுதங்கள், விமானப் போக்குவரத்துக்கு போயிங்-ஏர்பஸ் விமானங்கள் என்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்காவில் அடிமைகளின் குழந்தைகள் அடிமைகளாகவே பிறந்தார்கள். அமெரிக்காவில் அடிமைகள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. மனிதாபிமானம் மிக்க எஜமான்கள் கூட அடிமைகளை தமக்கு சமமாக நடத்துவதில்லை. அடிமைகள் கால்நடைகள் போலவே கருதப்பட்டனர். மூர்க்கத்தனமான இந்த வியாபாரம் லட்சக்கணக்கான நபர்களின் சாவுக்கும் இனங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. சுமார் 1.2 கோடி அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர்களில் சுமார் 10% முதல் 20% வரை வழியிலேயே கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்.

அடிமைகள், ஆப்பிரிக்க கடற்கரையில் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு தொழிற்சாலைகள் என்று அழைக்கப்பட்ட துறைமுகங்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த காத்திருக்கும் நேரத்தில் சுமார் 8,20,000 அடிமைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் பிறகு அடிமைகள் மத்திய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த கடற்பயணத்தில் சுமார் 22 லட்சம் அடிமைகள் உயிரிழந்திருப்பார்கள். பல மாதங்களுக்கு நெருக்கமாக, சுகாதார வசதி இல்லாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளின் சாவு வீதத்தைக் குறைப்பதற்காக கட்டாய நடனமாடுதல், சாப்பிட விரும்பாதவர்களுக்கு கட்டாயமாக உணவு ஊட்டுதல் போன்ற 'நலவாழ்வு' நடவடிக்கைகளையும் கப்பல் உரிமையாளர்கள் மேற்கொண்டார்கள். கப்பலின் சூழலைத் தாங்க முடியாமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம்.

ஐடி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கால் லெட்டருக்குக் காத்திருத்தலையும், பெஞ்சில் காத்திருத்தலையும், இரவு ஷிப்டுகளில் வாழ்க்கையைத் தொலைத்தலையும் ஒத்திருப்பதை நினைவுபடுத்தலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் 1778ல் அடிமைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்த முதல் மாநிலமானது. அடிமை வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டென்மார்க் 1792ல் சட்டமியற்றி 1803க்குப் பிறகு அதை தடை செய்தது.  அதைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றாக அடிமை வியாபாரத்தை தடை செய்தன. அமெரிக்காவில் வந்து சேர்ந்த கடைசி அடிமை கப்பல் 1859ல் சட்ட விரோதமாக பல ஆப்பிரிக்கர்களை அலபாமாவுக்கு கடத்தி வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அடிமை முறையை ஒழித்தது.

அதன் பிறகு கடந்த 150 ஆண்டுகளாக அடிமை வர்த்தகமும் அடிமை முறையும் ஏற்படுத்திய அழிவுகளையும் கொடுமைகளையும் பற்றி நூற்றுக் கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவு ஆரம்பித்த நவீன உலகமயமாக்கலின் சமூக, கலாச்சார, பொருளாதார அழிவுகள் குறித்து ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நாசகார அமைப்பை உடைத்து மக்கள் குடியரசுகள் உருவான பிறகு அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதன் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

மனிதர்களை தாக்கிப் பிடிப்பது, கடத்திச் சென்று விற்பது, சூடு போட்டு அடையாளம் ஏற்படுத்துவது, கப்பலில் ஆடு மாடுகள் போல அடைத்து ஏற்றிச் செல்வது, கால்நடைகள் போல  பராமரித்து வேலை வாங்குவது போன்றவற்றை இன்றைய உலகில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அடிமை வர்த்தகம் நடந்த ஆண்டுகளிலும், அடிமை முறை நடைமுறையில் இருந்த காலகட்டத்திலும் அதற்கு ஆதரவாக, அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றத்தைத் தூக்கிப் பிடித்து வர்த்தகர்கள், ஆட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வாதிட்டார்கள், அடிமை முறையை ஊக்கத்துடன் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்றைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் டாடா குழுமமும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால் அடிமை வியாபாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். அத்தகைய அடிமை வர்த்தகர்கள் மீது இன்றைய வரலாறு காரி துப்புவது போல இன்றைய உலகில் சுரண்டல்காரர்களாக கொடி கட்டி நிற்கும் இவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கும் என்பதை நாம் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

டாடாவின் புதிய தலைமை


டாடா குழுமத்தின் இப்போதைய தலைவரான ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறும்போது அவரது இடத்தில் வரப் போகிறவர் அவரது மச்சான் உறவுமுறைக்கார சைரஸ் மிஸ்திரி என்று அறிவித்திருக்கிறார்கள்.

'உலகெங்கிலுமுள்ள திறமையான தலைமை நிர்வாகிகளை பரிசீலித்து அடுத்த குழுமத் தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம்' என்று இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களில் பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தையை தேடிக் கண்டுபிடித்தது போல பரிசீலனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

டாடா குழும நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தனிப்பெரும் உரிமையாளரான ஷாபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி (இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார்). குடும்பத்துக்கு வெளியில் கட்டுப்பாடு போய் விடக்கூடாது என்ற ஒழுக்கமும், அதிக பங்குகள் வைத்திருப்பவர்தான் சட்டாம்பிள்ளை என்ற கார்பொரேட் ஒழுங்குமுறையும் தூக்கிப்பிடிக்கப்பட்டது யாருக்கும் வியப்பைத் தந்து விடவில்லை.

இந்தியாவின் பிற தொழிலதிபர்கள் புதிய இளவரசருக்கு தமது நல்வாழ்த்துக்களை முறையாக தெரிவித்துக் கொண்டார்கள்.

'அனில் அம்பானி ஊழல் செய்திருக்கலாம், சத்யம் ராமலிங்க ராஜூ மோசடி செய்திருக்கலாம், ஆனால் ஒரு டாடாவைப் போல ஒரு இன்போசிஸ்சைப் போல எல்லா நிறுவனங்களும் செயல்படுவதுதான் சொர்க்கபுரியை உருவாக்கும் மார்க்கம்'. 2010-11 நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய டாடா குழுமம்தான் இந்தியாவில் முதலாளித்துவத்தின் ஆதர்ச பிரதிநிதியாக தூக்கிப்பிடிக்கப்படுகிறவர்கள்.

'டாடான்னா நேர்மை' என்று விளம்பரங்களில் அவர்களே பறைசாற்றிக் கொள்வது யாருக்கு நேர்மையாக இருப்பது?

1840களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து அபின் விற்பதன் மூலம் சீன மக்களை போதைக்கு அடிமையாக்கும் விரிவாக்கக் கொள்கையை பின்பற்றியது. '(creation of wealth ) நாட்டுக்கு வளம் உண்டாக்குவது என்றால் நாட்டை ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் ஒட்டி நின்று பணம் சேர்ப்பதுதான்' என்பதை 19ம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பின்பற்றியவர் இன்றைய டாடாக்களின் மூதாதையர். அபின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து பொருள் ஈட்டியவர் ஒரு டாடா.

இது தொடர்பாக ஹாங்காங் அரசு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து (http://www.legco.gov.hk/1886-87/h870325.pdf)

"கூட்டத்தின் போது 'ஹாங்காங் அபின் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்' என்ற ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தகர்களின் சார்பாக டேவிட் சாசூன் & சன்ஸ் நிறுவனத்தின் ஷெல்லிம் எசகீல் ஷெல்லிமும் டாடா & கம்பெனியின் ருத்தன்ஜீ டாடாவும் அடங்கியவர்கள் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்கள்”

20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளுக்கு மேல் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவின் தந்தைதான் ருத்தன்ஜீ தாதாபாய் டாடா. 1991லிருந்து இன்று வரை பொறுப்பில் இருக்கும் ரத்தன் டாடா ஜேஆர்டி டாடாவின் மருமகன்.

1868ல் ஜாம்ஷெட்ஜி டாடா துணித்துறை நிறுவனம் ஒன்றை மும்பையில் நிறுவி டாடா குழுமத்தின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். 1877 ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்ட நன்னாளில் தானும் தனது நண்பர்களும் பணம் போட்டு ஆரம்பித்த நாக்பூர் ஜவுளி ஆலைக்கு 'பேரரசி ஆலை' என்று பெயர் சூட்டி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ஜாம்ஷெட்ஜி டாடா.

'தமது அரசியல் அதிகாரம் போய் விட்டாலும் இந்தியாவை தொடர்ந்து கொள்ளை அடிக்க வழி வேண்டும்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆங்கிலேயர்கள் 1884ல் ஆரம்பித்து வைத்த இந்திய தேசிய காங்கிரசின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராகவும் நின்றவர் ஜாம்ஷெட்ஜி டாடா.

இந்தியாவின் முதல் எ்கு ஆலை, மகாராஷ்டிரத்தில் நீர்மின்நிலையம், பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தாஜ்மகால் ஐந்து நட்சத்திர விடுதி என்று எதிர்கால டாடா குழுமத்தின் பரந்து பட்ட வர்த்த பேரரசின் அடித்தளங்களை அவர் உருவாக்கினார். இவற்றுக்குத் தேவையான நிலம், இயற்களை வளங்கள், அரசாங்க மானியம், வேண்டிய அனுமதிகள் பெறுவதற்கு அப்போதைய ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டு இந்த 'தேசிய' நிறுவனங்களை கட்டி அமைத்தார்.

'இந்திய தேசிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது' என்று டாடாவின் வரலாற்றாசிரியர்களால் வியக்கப்படும் டாடா ஸ்டீல் முதலாம் உலகப் போரின் போது ஆங்கிலேய போர் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக வடக்கு ஆப்பிரிக்காவுக்கு தண்டவாளங்கள் அமைக்க எ்கு தயாரித்து அளித்தது.

1916ல் நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில், "அமோக லாபம்... ஆரம்ப வடிவமைப்பை விட 30% உற்பத்தி அதிகரிப்பு... தயாராக, வாங்க விரும்பும் சந்தைகள், ஆர்டர் பதிவேடு நிரம்பி வழிகிறது" என்று மகிழ்ச்சியுடன் நிறுவன தலைவர் அறிவிப்பதற்கு உறுதுணையாக ஏகாதிபத்திய பேரழிவு போரை பயன்படுத்திக் கொண்டது இந்த தேசபக்த குழுமம்.

1938ல் பொறுப்பேற்ற ஜேஆர்டி டாடா அடுத்தடுத்து அமைந்த காங்கிரசு 'சோசலிச' உருவாக்கிய தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கான லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ் இவற்றுக்கு ஏற்றபடி டாடா குழும நிறுவனங்களை வளர்த்துச் சென்று தமது முன்னோடிகளின் சீரிய பணிகளை தொடர்ந்தார்.

இப்போதைய தலைவர் ரத்தன் டாடா, நெருக்கி வந்த உலக ஏகாதிபத்தியங்களுக்குத் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட ஆண்டுகளில் நீரா ராடியா போன்ற கார்பொரேட் தரகர்கள், பன்னாட்டு நிதி சூதாட்டம், மெகா ஊழல்கள் என்று டாடா குழும நிறுவனங்களை காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்தார்.

குழும நிறுவனங்களின் தேசிய பாசாங்குகளை உடைத்து டாடா ஸ்டீலை பிரிட்டனின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விழுங்க வைத்து அதை செரிக்க கசாயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டாடா மோட்டாருக்கு பிரிட்டனின் லேண்ட்ரோவர் - ஜாகுவார் என்ற கடப்பாரையை ஊட்டி விட்டு பன்னாட்டு குழுமமாக்கியிருக்கிறார். டிசிஎஸ் என்று அமெரிக்காவுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி தகவல் தொழில் நுட்ப புரட்சியிலும் தமக்குரிய கணிசமான பங்கை பிடித்திருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களாயிருந்தாலும், நேருவின் சோசலிச அரசாக இருந்தாலும், 1980களுக்குப் பிறகான உலகமயமாக்கப்பட்ட சூழலாயிருந்தாலும், காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப தாளம் போட்டு திறமையாக தமது கால் பரப்பி வளர்வதுதான் இவர்களின் சிறப்பு. நேற்று முளைத்த காளான்களாக அம்பானிகளும், மிட்டல்களும் ஊழல்களில் மாட்டி விழித்துக் கொண்டிருக்க அப்படி எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், சட்டத்தின் வரையறைக்குள் தனது கொள்ளைகளை வைத்துக் கொள்வது அல்லது தமக்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வது போன்ற கார்பொரேட் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

'காலத்துக்கேற்ப தொழில் முனைவு செய்வதுதான் எங்கள் தர்மம், அந்தந்த கால கட்ட அமைப்புகளுக்குள் திறமையாக செயல்பட்டு நாட்டில் வளங்களை உருவாக்கினோம்' என்பதுதான் டாடா போன்றவர்களின் தத்துவம். இனிய இசையை ஓட விட்டு, நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலை போட்டு தன் கழுத்து அறுக்கப்படுவதை உணராமலேயே ஆட்டின் சங்கை அறுப்பது அவர்களது அணுகுமுறை. அறுபடும் ஆடுகளைப் பற்றிய கவலை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இழைக்கும் கொடூரங்களை பொருட்படுத்தாமல் வர்த்தகம் செய்யும் இவர்களுக்கும் நாசி ஜெர்மனி அரசாங்கத்துக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வழங்கி ஹோலகாஸ்டுக்கு துணை போன ஐபிஎம் நிறுவனத்துக்கும் என்ன வேறுபாடு!

டாடா குழுமம் போன்ற 'நியாயமான' ஒரு நிறுவனம் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் ஆப்பிரிக்காவின் கடற்கரை நாடுகளிலிருந்து கருப்பு இன மக்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் விற்பனை செய்யும் அடிமை வியாபாரத்தின் மூலம் வளம் சேர்க்கத் தயங்கியிருப்பார்களா?